

பெரியாரின் ஆசைப்படி பள்ளிகளில் கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக காமராஜர் வாழ்த்து பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பெருமை காமராஜரையே சாரும். 1954-ம் ஆண்டில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற அவர், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி முறையைக் கைவிட்டார். மூடப்பட்டப் பள்ளிகளை திறந்ததுடன், தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை 27 ஆயிரமாக உயர்த்தினார். கல்விக்காக குழந்தைகள் அதிக தூரம் அலையக்கூடாது என்பதற்காக அனைத்துக் கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகளை தொடங்கினார்.
குழந்தைகள் கல்விக்கு பசி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு இப்போது மதிய உணவு வழங்கப்படுவதற்கு வழிகாட்டியாக விளங்கியவர் காமராஜர். கல்வி முன்னேற்றம் தான் அவரது முதன்மைப் பணியாக இருந்தது. காமராஜரின் காலத்தில் தரமான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படுத்தப்பட்டது.
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை (ஐஐடி) தமிழகத்திற்கு கொண்டு வந்தவரும் அவர் தான். காமராஜர் முதல்வராக இருந்த போது தான் தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகளும், நீர்ப்பாசனத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. ஒரு மாநிலமும், அதன் மக்களும் முன்னேற்ற என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் காமராஜர் திட்டமிட்டு செயல்படுத்தினார். அவரது தொலைநோக்குப் பார்வை வேறு எந்த தலைவருக்கும் இல்லை.
தமிழ் வழிக் கல்வி முடக்கப்பட்டு, சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் ஆங்கில வழிக் கல்வி முறை ஊக்குவிக்கப் டுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். காமராஜர் விரும்பிய சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வியை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டும்.
பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக காமராஜர் வாழ்த்துப் பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.