Published : 03 Mar 2014 12:00 AM
Last Updated : 03 Mar 2014 12:00 AM

திமுகவுடன் நாளை பேச்சுவார்த்தை: 5 தொகுதிகள் கேட்க வி.சி. முடிவு

திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. 5 தொகுதிகளைக் கேட்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுகவில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இன்று மாலை முடிவடை கிறது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது 5 தொகுதிகளை கேட்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது இதுதொடர்பாக அக்கட்சியின் நிர் வாகிகள் கூறியதாவது:

இந்தக் கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக நாங்கள் இருக்கிறோம். தமிழகம் முழுவதும் எங்களுக்கு கணிசமான அளவு ஓட்டு வங்கி உள்ளது. கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றோம்.

இப்போது 5 தொகுதிகளைக் கேட்க முடிவு செய்துள்ளோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி குழுவுடன் செவ்வாய்க்கிழமை பேச உள்ளோம். அப்போது எங்கள் நிலையை அவர்களிடம் தெரிவிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x