

நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப் பட்ட சுவாதிக்கு ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் அபர காரியம் (10-ம் நாள் சடங்குகள்) நேற்று தொடங்கின. இதில் சுவாதியின் தந்தை, அவரது தாய்மாமன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவா திக்கு இறுதிச் சடங்குகள் சென்னையில் நடைபெற்ற நிலையில், அபர காரியங்களை தாய்வழி பூர்வீகமான ஸ்ரீரங்கத்தில் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதற்காக சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், தாய் ரங்கநாயகி உள்ளிட்டோர் நேற்று முன் தினம் ஸ்ரீரங்கம் வடக்கு அடைய வளஞ்சான் வீதியிலுள்ள பூர்வீக வீட்டுக்கு வந்தனர். பின்னர் நேற்று காலை கொள்ளிடக்கரையில், வடக்கு வாசல் சாலையிலுள்ள ‘விஷ்ணு பாதம்’ வளாகத்தில் சுவாதிக்கு அபர காரியம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையே, சுவாதி கொலை வழக்கில் தொடர்புடைய ராம்குமார் கைது செய்யப்பட்ட தகவல் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்களுக்குத் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று காலை 8 மணி யளவில் சந்தான கோபால கிருஷ்ண னும், சுவாதியின் தாய்மாமா முகுந் தனும் ஆட்டோவில் கொள்ளிடக் கரைக்கு வந்தனர். அவர்களிடம், சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
மேலும், தங்களை புகைப்படம், வீடியோ எடுக்க வேண்டாம் என வேண்டு கோள் விடுத்தனர். எனினும் சிலர் தொடர்ந்து படம் பிடித்ததால், பத்திரிகை யாளர்களிடம் சுவாதியின் தந்தை கோபப்பட்டார். அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில், விஷ்ணுபாதம் வளா கத்துக்குள் சுவாதிக்கு அபர காரியம் நடத்தப்பட்டது.
பின்னர், அவர்கள் வடக்கு அடைய வளஞ்சான் வீதியிலுள்ள வீட்டுக்குச் சென்றனர். அங்கு தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தவிர, வேறு யாரை யும் சந்திக்க சுவாதியின் பெற்றோர் மறுத்துவிட்டனர். பத்திரிகையாளர் களைச் சந்திப்பதையும் தவிர்த்தனர்.
சுவாதிக்கு பிடித்த இடம் ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் வடக்கு அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும் போது, “சுவாதி செல்லமாக வளர்ந்த பெண். அவரது இழப்பிலிருந்து பெற்றோ ரும், உறவினர்களும் இன்னும் மீளவில்லை. மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுவாதி சென்னையில் வளர்ந்தவர் என்றாலும், ஸ்ரீரங்கம் அவருக்கு மிகவும் பிடிக்கும். விடுமுறை நாட்களில் அடிக்கடி இங்கு வந்து செல்வார். இதன் காரணமாகவும், பூர்வீக ஊர் என்பதாலும் அவரது மறைவுக் குப் பின்னர் செய்யும் காரியங்களை இங்கு நடத்துகின்றனர். குடும்ப வழக்கப் படி, 12-ம் தேதி வரை இச்சடங்குகள் நடைபெறும். அதன்பின் மீண்டும் சென்னைக்குச் செல்ல சுவாதியின் பெற்றோர் திட்டமிட்டுள்ளனர்” என்றனர்.