Published : 28 Aug 2016 09:31 AM
Last Updated : 28 Aug 2016 09:31 AM

சென்ட்ரல் - பேசின் பிரிட்ஜ் இடையே புதிய பாதை பணி: ரயில் சேவையில் பெரிதும் மாற்றம் - அக்டோபர் 7 வரை தொடரும்

சென்னை சென்ட்ரல் பேசின் பிரிட்ஜ் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவ தால் அக்டோபர் 7-ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள் ளன. இதனால் இந்த மார்க்கத்தில் அக்டோபர் 7-ம் தேதி வரையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம் சர்மா, மூத்த வணிக மேலாளர் ரவிசந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சென்னை சென்ட்ரல் பேசின் பிரிட்ஜ் இடையே 5, 6-வது புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் ரூ.30.53 கோடியில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், கடந்த 23-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரையில் விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அடுத்த மாதம் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத் தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டைக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்படுகிறது. செப்டம்பர் 17 , 18-ம் தேதிகளில் சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் (மூர்மார்க்கெட் வளாகம்) தொடர்ந்து 52 மணி நேரம் பணிகள் நடக்கவுள்ளன. இதனால், மேற் கண்ட 2 நாட்களுக்கு மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து மின்சார ரயில்கள் ஏதுவும் இயக்கப்படாது. இதற்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

இது தவிர வெளியூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக வந்து செல்ல வேண்டிய மெயில், விரைவு ரயில்கள் செப்டம்பர் 6-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரையில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வராது. மாற்றாக பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப் படும். சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ஹவுரா மெயில் செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 6 வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல், மூர்மார்க்கெட் வளாகம், கடற்கரை, பெரம்பூர் ஆகிய 4 இடங்களில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 138 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x