

வரும் கல்வி ஆண்டில் (2017-18) 150 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புவியியல் தகவல் முறையில் (ஜிஐஎஸ்) தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபட செயலி உதவியுடன், கல்வி வசதி இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு 2011-ம் ஆண்டு முதல் 226 புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குவதற்கு சாத்தியமற்ற பகுதிகளில், வசிப்பிடங்களுக்கு அருகேயுள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து உதவிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரையில் 113 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, 2017-18-ம் ஆண்டில் 150 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறியப்பட்ட 36 ஆயிரத்து 930 குழந்தைகளை வரும் ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.