Published : 21 Feb 2017 02:47 PM
Last Updated : 21 Feb 2017 02:47 PM

சீமைக் கருவேல மரங்களை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் தீர்மானம்

சீமைக் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், பகிரங்க டென்டர் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் பிப்ரவரி 20,21 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக இன்று ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை பிப்ரவரி 27-ம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பல இடங்களில் அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவில் தனியார் நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை சம்பந்தப்பட்டவர் அகற்றவில்லை என்றால் அரசே அகற்றிவிட்டு செலவினத்தில் இரு மடங்கு தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான வறட்சியின் காரணமாக வேலையின்றி வருமானமின்றி மக்கள் வாழ வழியின்றி இருக்கிறார்கள். பிழைப்பு தேடி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றப் பணம் செலவழிப்பது சாத்தியமற்றது என்பதை அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து பொதுமக்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கோருகிறது.

அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதில் தீவிரமான நடவடிக்கை எடுப்பதுடன் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பகிரங்க டென்டர் மூலம் இப்பணி மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அத்துடன் மாற்று மரங்களை நடுவதற்கும் அரசு திட்டமிட வேண்டும்.

சீமைக் கருவேல மரங்களை பயன்படுத்தி கரி தயாரித்து விற்பனை செய்வதை பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இத்தகைய குடும்பங்களின் மறுவாழ்விற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x