Published : 01 Jul 2016 08:27 AM
Last Updated : 01 Jul 2016 08:27 AM

சொத்துக்காக தாத்தாவை கொன்ற பேரன் கைது

எண்ணூரில் சொத்துக்காக தாத்தாவை கொலை செய்த பேரனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 4-வது தெருவில் வசித்து வந்தவர் சபாபதி (80). குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சகுந்தலா, மலேசியாவில் கணவருடன் வசித்து வருகிறார். சகுந்தலாவின் மகள் கலாராணி, மகன்கள் நாகராஜ், குப்புராஜ், மாரிமுத்து ஆகியோர் தாத்தா சபாபதியுடன் வசித்து வந்தனர்.

இவர்களில் நாகராஜ் (36) எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். சொத்து கேட்டு தாத்தாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் சபாபதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நாகராஜ், தாத்தாவிடம் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். பேரனுக்கும் தாத்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நாகராஜ், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சபாபதியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமைறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக சபாபதியின் மற்றொரு பேரன் குப்புராஜ் கொடுத்த புகாரின்பேரில் எண்ணூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குற்ற வாளியை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சிறையில் அடைப்பு

தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நாகராஜை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x