Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM

மறு தகுதி தேர்வு நடத்தக் கோரிய கணினி ஆசிரியர்களின் மனு தள்ளுபடி

மறு தகுதித் தேர்வு நடத்தக் கோரி கணினி ஆசிரியர்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1880 நிரந்தர கணினி ஆசிரியர் பணியிடங்களை தமிழக அரசு 2006-ல் உருவாக்கியது. ஏற்கெனவே எல்காட் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்தியது. நிரந்தர ஆசிரியராக பணி நியமனம் பெற அந்தத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என தகுதி நிர்ணயம் செய்யப்பட்டது.

35% எடுத்தால் மறுதேர்வு

இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை மட்டும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே நேரம், 35%-க்கு மேல் 50%-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மறு தகுதித் தேர்வு நடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

20 கேள்விகள் தவறு

இதையடுத்து மீண்டும் ஒரு சிறப்பு தகுதித் தேர்வு 2010-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வையும் எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். வினாத்தாளில் தவறான கேள்விகள் இருந்ததாக அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து இதுகுறித்து ஆராய்ந்த சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழு, மொத்தம் 150 கேள்விகளில் 20 கேள்விகள் தவறானவை என அறிக்கை அளித்தது.

தவறான 20 கேள்விகளை நீக்கிவிட்டு மீதமுள்ள 130 கேள்விகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மீண்டும் பலர் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். தவறான கேள்விக்கு விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், கே.கே.சசிதரன் விசாரணை நடத்தினர். அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் இந்த மனுக்களை ஏற்கக் கூடாது என வாதிட்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர். ‘‘மனுதாரர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். எனினும், இந்த வழக்கில் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்து, அவை உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் சீராய்வு மனு என்ற பெயரில் வழக்கு தொடர்பான எல்லா அம்சங்களையும் மீண்டும் விவாதிக்க இயலாது’’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x