தமிழகம் பாலைவனமாக மாறுவதை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

தமிழகம் பாலைவனமாக மாறுவதை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
Updated on
1 min read

அண்டை மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் தமிழகம் பாலைவனமாக மாறும் சூழல் ஏற்படும். இதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கரூரில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 அணைகளைக் கட்டி விட்டனர். தற்போது, மேலும் ஒரு அணை கட்ட உள்ளனர். கர்நாடகம் மேகேதாட்டுவில் அணை கட்டவுள்ளது, முல்லை பெரியாறில் கேரளம் புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இவற்றை தமிழக அரசு தடுக்க வேண்டும். இவற்றை நாம் அனுமதித்தால் தமிழகம் பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும்.

தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், அந்த கட்சியின் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றார் வைகோ.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in