Published : 02 Feb 2014 11:50 AM
Last Updated : 02 Feb 2014 11:50 AM

பாஜக கூட்டணியில் திமுக.வை சேர்க்க முயற்சி- குஜராத் உள்துறைச் செயலாளரிடம் பேச்சுவார்த்தை

காங்கிரஸ் கூட்டணிக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார் கருணாநிதி. இந்தச் சூழலில் பாஜக கூட்டணியில் திமுக.வை சேர்க்க தேசிய அளவில் சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் ‘தி இந்து’விடம் பேசினர். “பாஜக-வை தேமுதிக விரும்பவில்லை என்று சொல்லப்பட்டாலும் தேமுதிக-வையும் உள்ளடக்கிய திமுக - பாஜக கூட்டணியை அமைப்பது குறித்து ஏற்கெனவே ஒரு சுற்றுப் பேசி இருக்கிறோம். இப்போது இரண்டாம் கட்ட நடவடிக்கையை தொடங்கி இருக்கிறோம்.

விரிவான ஆலோசனை

கோவாவைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர் மூலம் குஜராத் உள்துறை செயலாளர் பதக்கிடம் கடந்த இரண்டு தினங்களாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ‘தமிழகத்தில் திமுக கூட்டணியே தொடர்ந்து மூன்று முறை அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இம்முறையும் திமுக கணிசமான இடங்களைக் கைப்பற்றும் சூழல் இருக்கிறது.

திமுக-வோ அதிமுக-வோ காங்கிரஸுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை. காங்கிரஸை தனிமைப்படுத்த இதுவே வாய்ப்பு. அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி சேரும்பட்சத்தில் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மோடி இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்பதை முன்னிலைப் படுத்தி பிரச்சாரம் செய்து தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் உள்ளே இழுத்து விடுவார் கருணாநிதி. இதன் மூலம் மோடி மீதான இந்துத்துவா முத்திரையின் வீரியமும் குறையும்.

திமுக தலைவர் மீது நம்பிக்கை

சரத்பவார், ராம்விலாஸ் பாஸ்வான், பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு உள்ளிட் டவர்கள் கருணாநிதிக்கு நெருக்க மானவர்கள். 1980-ல் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பாடு செய்தவரே பரூக் அப்துல்லாதான். திமுக-வுடன் கூட்டணி சேர்வதின் மூலம் தேர்தலுக்கு முன்போ பின்போ அவர்களையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கருணாநிதியால் அழைத்து வரமுடியும்.

ஏற்கெனவே பாஜக கூட்டணி 220 இடங்களை கைப்பற்றும் என கணிப்புகள் கூறுகின்றன. தேமுதிக-வுடன் இணைந்த திமுக கூட்டணியில் அங்கம் வகித்தால் தமிழகத்தில் பாஜக அணிக்கு 30 இடங்கள் கிடைக்கும். இவ்வாறாக 250 இடங்களை பிடித்துவிட்டால் எஞ்சிய 22 இடங்களைக் கைப்பற்றுவது பெரிய விஷயமல்ல’ என்று பதக்கிடம் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது’’ என்று அந்த முக்கியப் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

இதன் இன்னொரு பகுதியாக சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, ஐ.கே.குஜ்ரால் மகன் நரேஷ் குஜ்ரால், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்களும் திமுக - பாஜக கூட்டணிக்கு அடித்தளம் போடும் வேலைகளை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x