Published : 31 Mar 2014 11:19 AM
Last Updated : 31 Mar 2014 11:19 AM
பண்ருட்டி அருகே அரசடிக்குப்பம் எனும் கிராமத்தில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவு உள்ள முந்திரித் தோப்பில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான முந்திரிப் பயிர்கள் கருகி சேதமடைந்தன.
பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரை அடுத்த அரசடிக்குப்பம், சிலம்பிநாதன் பேட்டையில் முந்திரித் தோப்புகள் உள்ளன. இங்கு 45 ஏக்கரில் மரங்கள் உள்ளன. கோடைக்காலமான தற்போது முந்திரிக் கொட்டை அறுவடை சீசனாகும். எனவே முந்திரி பயிரிட்ட விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை முந்திரி அறுவடைக்காக தோப்புப் பக்கம் சென்ற போது, அரசடிக்குப்பம் பகுதியில் முந்திரி மரங்கள் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
பின்னர் பண்ருட்டி தீயணைப்பு நிலையம் மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து சேருவதற்குள் தீ மள மளவென பரவி சுமார் 45 ஏக்கரில் இருந்த முந்திரி மரங்களை எரித்து தீக்கிரையாக்கியது.
தட்சிணாமூர்த்தி என்ற முந்திரி விவசாயி கூறுகையில்,” தற்போது கோடைக்காலம், அறுவடை சீசன். இத்தருணத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது மிகவும் கவலையளித்துள்ளது. இதனால் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான முந்திரிப் பயிர்கள் சேதம் ஏற்பட்டிருக்கும்” என்றார். தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பண்ருட்டி வட்டாட்சியர் ராஜாராம் தலைமையிலான வருவாய்த் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT