Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM

தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது

தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2012 டிசம்பர் மாதம் வரை மொத்தம் 4,90,383 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1,38,258 பேர் இறந்துள்ளனர். அதிக சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் தான் முதலிடத்தில் (11.6%) இருந்தது. இதையடுத்து, உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும்(10.9%), ஆந்திரா 3-வது (10.8) இடத்திலும் இருந்தது. சாலை விபத்துகளைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில், சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும், மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது, ஹெல்மெட் அணிய வேண்டும், சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினால், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சமீபத்தில் கிடைத்த புள்ளி விவரங்களின்படி 2012 ஜனவரி முதல் நவம்பர் 30-ம் தேதி வரையில் 62,285 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 14,871 பேர் இறந்துள்ளனர். ஆனால் 2013 ஜனவரி முதல் நவம்பர் 30ம் தேதி வரையில் 61,024 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், 14,384 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இறப்போரின் எண்ணிக்கையில் 487 பேர் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலும் விபத்துகள் குறைந்தன

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மற்ற மாவட்டங்களை விட, இங்கு அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடக்கிறது. இருப்பினும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் 2012 ஜனவரி முதல் நவம்பர் 30 வரையில் நடந்த விபத்துகளில் 1,434 பேர் இறந்துள்ளனர். 2013 ஜனவரி – நவம்பர் 30 வரையில் நடந்த விபத்துகளில் 1,256 பேர் இறந்துள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரகத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

போக்குவரத்து மற்றும் காவல்துறைகள் இணைந்து விபத்துகளை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டில் விபத்துகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

2012 ஆண்டில் நடந்த 67757 சாலை விபத்துகளில் மொத்தம் 16,175 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டில் நவம்பர் வரையில் நடந்த 61,024 விபத்துகளில் 14,384 பேர் இறந்துள்ளனர். விபத்து மற்றும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டுமே 8,431 பெரிய அளவிலான விபத்துகள் நடந்துள்ளன. சாலை விபத்துகளுக்கு 95 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. அதுபோல், மது குடித்து விட்டு ஓட்டிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x