Published : 07 Sep 2016 12:48 PM
Last Updated : 07 Sep 2016 12:48 PM

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு, மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்?- வாசன் கண்டனம்

மத்திய அரசு இதுவரையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு, மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடக அரசு ஆண்டுதோறும் காவிரியிலிருந்து தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு ஆண்டுதோறும் கால அட்டவணைப்படி மாதம்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்கவில்லை.

கடந்த ஆகஸ்ட் 2016 வரை வழங்க வேண்டிய 94 டி.எம்.சி. தண்ணீரை முழுமையாக வழங்காமல் 33 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே வழங்கியுள்ளது. எனவே கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே 61 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்.

இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. அதன்படி இந்த 10 நாட்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவு சுமார் 12 டி.எம்.சி. இந்த அளவும் போதுமானதல்ல. இருப்பினும் இதனையாவது கர்நாடக அரசு தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும் இந்த 10 நாட்கள் முடிந்த பிறகும் தொடர்ந்து தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு போதிய தண்ணீர் இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டியும் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது. இதனால் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தராமல் காலம் தாழ்த்துவதற்கும், முழுமையாக தராமல் இருப்பதற்கும் முயற்சி மேற்கொள்கின்றது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை மத்திய அரசு வேடிக்கைப்பார்க்கக் கூடாது.

மத்திய பாஜக அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசு ஆகிய இரு அரசும் கர்நாடகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் அரசியல் போன்ற காரணங்களால் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைப்பதற்கு வழிவகுக்கவில்லை. மேலும் மத்திய அரசு இதுவரையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு, மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அதனை உடனடியாக அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

தமிழக அரசு நதிநீர் பிரச்சினையில் - கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அநியாயமான செயல்களை கண்டிப்போடு தடுத்து நிறுத்த - நம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தான அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பாரதப் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

மேலும், தமிழக அரசு நதிநீர் பிரச்சினையில் அண்டை மாநிலங்களினால் நமக்கு எந்தவிதத்திலும் பிரச்சினை வராமல் இருப்பதற்கு தீர்க்கமான முடிவு காண மத்திய அரசையும், நீதிமன்றத்தையும் நாடி தமிழகத்துக்கு நியாயம் பெற்றுத்தர தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x