Published : 26 Jan 2014 11:25 AM
Last Updated : 26 Jan 2014 11:25 AM
தகுதியான வேட்பாளர்கள் இல்லை என்றால், நோட்டாவிற்குதான் எங்களது வாக்கு என புதிய வாக்காளர்களாக அடையாள அட்டை பெற்றுக் கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
கோவை சித்தாபுதூரில் புதிய வாக்காளர்களாக இணைவு பெற்றவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டனர். அடையாள அட்டை பெற்றுக் கொண்ட அவர்களில் சிலர், தற்போதைய அரசியல் நிலை பற்றி கூறியது:
காயத்ரி கிருஷ்ணராஜ்: "தன்னலம் இல்லாமல் உண்மையாக மக்களைப் பற்றி நினைக்கக் கூடிய பொறுப்புணர்வுடன் கூடிய தலைவருக்கு, வரும் தேர்தலில் எனது வாக்கு இருக்கும். வேட்பாளர் இளைஞராக இருப்பது அவசியம். இளைஞர்கள்தான் புதிய எண்ணங்களுடன் தற்போதைய நிலைக்கு தகுந்தாற் போல் செயல்படுவார்கள். முக்கியமாக, ஊழல் இல்லாத அரசியல் வேட்பாளரா என்பதை பார்த்து முடிவெடுப்பேன். அவ்வாறு இல்லையெனில் நோட்டாவில் பதிவு செய்வேன்."
பா.பரத்: "ஆம் ஆத்மி போன்று ஊழலை எதிர்த்து போராடும் இளைஞர்கள் நிறைந்த கட்சிக்கு, எனது வாக்கு இருக்கும். ஏழைகளைப் பற்றி நினைக்கக்கூடிய, மதச்சார்பற்ற, ஊழலை எதிர்க்கக்கூடிய தலைவருக்கும், கட்சியாக இருந்தால் ஓட்டு அளிப்பேன். ஆனால், நான் எதிர்பார்ப்பது போன்ற கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் இல்லை. சரியான வேட்பாளர் இல்லாவிட்டால் நோட்டாதான் என் தேர்வு. நோட்டா பட்டனை கொண்டு வந்ததை வரவேற்கிறேன்."
ஆர்.கீர்த்தனா: "பொறுப்பான வேட்பாளர் தேர்தலில் நிற்கிறா, இளைஞரா, திறமையானவரா என்பது குறித்து பார்த்து ஓட்டு அளிப்பேன். இல்லாவிட்டால், நோட்டாவிற்கு தான் எனது வாக்கு."
எஸ்.ஸ்ருதி: "கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கக் கூடிய தலைவரைத் தேர்வு செய்வேன். ஊழல் இல்லாத கட்சியாகவும், தலைவராகவும் இருக்க வேண்டும். வேட்பாளராக நிற்பவரை முழுமையாக கேட்டறிந்து ஓட்டு அளிக்கலாமா என்பதை முடிவெடுப்பேன். இல்லாவிட்டால், நோட்டாதான்."
அரசியல்வாதிகள் கவனத்திற்கு... நோட்டா பெரிய மாற்றாக உருவெடுக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT