Published : 23 Nov 2013 11:57 AM
Last Updated : 23 Nov 2013 11:57 AM

தமிழக மீனவர்கள் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுவது குறித்த மீண்டும் ஒருமுறை பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் கடந்த 21–ஆம் தேதி அப்பாவி தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதை மிகுந்த மன வேதனையுடன் மீண்டும் ஒரு தடவை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். ‘‘உலக மீனவர் தினம்’’. அன்று இந்த சம்பவம் நடந்திருப்பது கவலை அளிக்கிறது.

இந்திய அரசு இந்த விஷயத்தில் மவுனமாக, உணர்ச்சியற்ற நிலையில் இருப்பதால்தான் மீண்டும், மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அமைதியாக வாழ்வாதாரத்தில் ஈடுபடும் போது சிங்களர்களால் கொடூரமாக தாக்கப்படுவது அதிகரித்தப்படி உள்ளது.

இந்திய அரசு இதையெல்லாம் பார்த்து மவுனமாக இருப்பதால்தான் சிங்கள கடற்படையினர் தைரியம் பெற்று மீண்டும், மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை சட்ட விரோதமான முறையில் பிடித்துச் செல்கின்றனர்.

பாக் ஜலசந்தியில் சமீபத்தில் 5 படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி பிடித்து சென்று விட்டதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்த 20 அப்பாவி ஏழை மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப் பட்டினத்தை சேர்ந்தவர்கள்.

இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி விட்டது. என்றாலும் இந்திய அரசு இதுவரை தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்க வில்லை. நடுக்கடலில் நடக்கும் தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர இந்திய அரசு தூதரக அளவிலும் பேச்சு நடத்த வில்லை.

கடந்த 21–ஆம் தேதி கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்கள் தவிர, ஏற்கனவே 60 தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் உள்ள சிறைகளில் வாடி வருகிறார்கள் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்களை இன்னமும் இலங்கை அரசு விடுதலை செய்யவில்லை.

நம்முடைய மீனவர்களின் 42 மீன்பிடி படகுகளை இலங்கை அரசு திருப்பித்தராமல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் நமது ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கணிசமான அளவுக்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்திய அரசும் நீங்களும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, தூதரக அளவில் பேச்சு வார்த்தை நடத்தி இலங்கை சிறைகளில் உள்ள 80 தமிழக மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு நமது மீனவர்களின் 47 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x