உறவினர்களாக இருந்தாலும் பணியாள் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

உறவினர்களாக இருந்தாலும் பணியாள் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

முதலாளியும், தொழிலாளியும் சகோதரர்களாக இருந்தாலும், பணியாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கலாம்என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் என்.மணிகண்டன். இவர் இவரது சகோதரர் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டி வந்தார். கடந்த 2001-ல் ஆட்டோ, விபத்தில் சிக்கியது. இதில் மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். அவர் பணியாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் இழப்பீடு கேட்டு, திண்டுக்கல் தொழிலாளர் துணை ஆணையருக்கு விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பித்தை ஏற்று, மணிகண்டனுக்கு ரூ.89 ஆயிரத்து 389 இழப்பீடு வழங்க, அந்த ஆட்டோ காப்பீடு செய்யப்பட்டிருந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத் துக்கு கடந்த 2006 டிச.2-ல் தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது. அதில், ஆட்டோ உரிமையாளரும், ஆட்டோவை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கியவரும் அண்ணன், தம்பிகள். ரத்த சம்பந்த உறவுமுறை கொண்டவர்கள். அவர்களிடம் முதலாளி, தொழிலாளி என்ற நிலை இல்லை. முதலாளி, தொழிலாளி என்ற நிலையில்தான் பணியாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியும் எனக் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம் பிறப்பித்த உத்தரவு: இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தவரும், விபத்தில் சிக்கிய ஆட்டோவின் உரிமையாளரும் அண்ணன், தம்பிகள் என்பதைத் தவிர, வேறு எந்த ஆவணங்களையும் இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை.

பணியாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதற்கு, முதலாளியும், தொழிலாளியும் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களாக இருப்பது ஒரு தடையல்ல. சகோதரர் ஒருவர் தனது வாழ்வாதாரத்துக்காக தனது மற்றொரு சகோதரரிடம் வேலை பார்ப்பது தவறு அல்ல.

இதனால் பணியாள் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க ஆணையர் பிறப்பித்த உத்தரவு தவறு இல்லை. எனவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in