Published : 18 Nov 2014 11:24 AM
Last Updated : 18 Nov 2014 11:24 AM

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: சென்னையில் 62 இடங்களில் போலீஸ் ஆய்வு

அரசால் நிர்ணயிக்கப்பட்டதை விட, அதிகமாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்வு செய்யப் பட்ட 62 இடங்களில் ஆய்வு நடத்தப் படுகிறது. நேற்று 15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ஆட்டோக்களுக்கான புதிய மீட்டர் கட்டணம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கிலோ மீட்டருக்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கும் மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடக்கத்தில் 50 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. சுமார், 3000 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், படிப்படியாக இந்த ஆட்டோக்கள் விடுவிக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பஸ்களில் ஆய்வு நடத்தப்பட்டதால், இந்த சோதனை குழுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதனால், ஆட்டோ கட்டண வசூல் மீண்டும் பழைய நிலைக்கே செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அதிகமாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து மற்றும் போலீஸ் துறை இணைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட 62 இடங்களில் ஆய்வு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று அதிக கட்டணம் வசூலித்த 15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரக உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘அதிக கட்டணம் வசூல், மீட்டர் பொருத்தாதது, பர்மிட் இல்லாதது உள்ளிட்டவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆர்டிஒக்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மேலும், தொடக்கத்தில் ஆய்வு நடத்தியது போல், போக்குவரத்து துறை மற்றும் போலீஸூம் இணைந்து நடத்துகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள சென்ட்ரல், எழும்பூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அசோக்நகர், தாம்பரம், திருவான்மியூர், மாம்பலம் உள்ளிட்ட 62 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது. அதிக கட்டணம், விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.100 முதல் ரூ.2,500 வரை அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, 24 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 4 பேர் இருப்பார்கள். நேற்று அதிக கட்டணம் வசூலித்த 15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட் டுள்ளது. இந்த ஆய்வு மேலும், தொடர்ந்து நடத்தப்படுகிறது. புகாரில் சிக்கினால் ஆட்டோ பர்மிட் ரத்து செய்யப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x