Published : 08 Sep 2016 07:51 AM
Last Updated : 08 Sep 2016 07:51 AM

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு: 4 வாரங்களில் பதில் அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகியோரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி அரசுக்கும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை கிண்டியைச் சேர்ந்த எஸ்.சுந்தர்ராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 32 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த முறையை ரத்து செய்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர் களால் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அது சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இதன்மூலம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படும் கவுன்சிலர்கள்தான் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவரை மறைமுக மாகத் தேர்ந்தெடுப்பார்கள். இது மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் களின் அதிகாரத்தை கவுன்சிலர் களிடம் சரண்டர் செய்வது போலாகி விடும். மேலும், இவ்வாறு தேர்ந் தெடுக்கப்படும் மேயர் மற்றும் தலைவர்கள் தங்களது பதவிக் காலமான 5 ஆண்டுகள் முழுவதையும் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்காக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறும்போது, “மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கான நபர்கள் கவுன்சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டால், கவுன்சிலர் களை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும். கவுன்சிலர்களால் மேயரோ, தலைவர்களோ தேர்ந்தெடுக்கப் பட்டால் அவர்களை எந்த நேரத்திலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் அந்த பதவியில் இருந்து தூக்கி எறிய முடியும். இதனால் அரசின் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் வகை யில், தமிழ்நாடு மாநகராட்சி சட்டத்தில் இதுவரை திருத்தம் கொண்டு வரப்படவில்லை. எனவே, 1996, 2001, 2011-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது போலவே இந்தாண்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலை வரை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் செல்லாது என்று அறி விக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி அரசுக்கும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப் பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை அக்டோபர் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x