

ஆலங்குடி குரு பகவான் கோயில் மற்றும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்களில் நேற்று நடைபெற்ற குருப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில், குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று காலை 9.30 மணியளவில், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு குருப் பெயர்ச்சி விழா நடைபெற்றது.
இதையொட்டி, நேற்று அதி காலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இந்தக் கோயிலில் உள்ள கலங்காமல் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், வள்ளி - தெய் வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. குரு பகவானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
காலை 9.30 மணியளவில் குரு பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையொட்டி, மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் குரு பகவானை வழிபட்டு, பரிகாரம் செய்துகொண்டனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திரு வாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
திட்டை கோயிலில்
இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. குரு பகவான் தனி சன்னதி கொண்டுள்ள இக்கோயிலில், குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பகவானுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, குரு பகவானை வழிபட்டனர்.