Published : 25 Oct 2014 09:54 AM
Last Updated : 25 Oct 2014 09:54 AM

சுங்க அதிகாரிகள் ரெய்டு செய்தபோது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை

சுங்க அதிகாரிகள் வீட்டிற்குள் புகுந்து திடீரென சோதனை நடத்தியதால் அவமானம் அடைந்த சென்னை தொழில் அதிபர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை சூளைமேடு காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கோபால்ராம்(65). 'நிக்கி இம்போர்ட்ஸ்' என்ற பெயரில் வீட்டருகிலேயே பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து பர்னிச்சர்களை இறக்குமதி செய்தும் வியாபாரம் செய்தார். இறக்குமதி தொழிலில் பல மோசடிகள் செய்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் கோபால்ராமை கைது செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார் கோபால்ராம்.

நிபந்தனை ஜாமீன்

தி.நகரில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலையில் தி.நகரில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு சென்று கையெழுத்து போட்டு வீட்டுக்கு வந்தார் கோபால்ராம். இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் பாண்டுரங்கன், முருகானந்தம் ஆகியோர் திடீரென கோபால்ராம் வீட்டுக்கு சென்று சோதனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலில் அவரது காரை சோதனை செய்துவிட்டு, 3-வது தளத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்தனர். இதை பக்கத்து வீட்டுக்காரர் களும், கோபால்ராமின் உறவினர்கள் சிலரும் பார்த்துள்ளனர்.

ஒரு அறையில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது, கோபால்ராமின் செல்போனுக்கு ஒரு அழைப்புவர, செல்போனில் பேசியபடியே 3-வது தளத்தின் பால்கனிக்கு வந்தவர், அங்கிருந்து கீழே குதித்துவிட்டார். பலத்த காயம் அடைந்த அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x