Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

ஆளுநர் உரையை புறக்கணித்தது ஏன்?- மு.க.ஸ்டாலின் பேட்டி

எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை சரி செய்யாததால் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்று திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா, வியாழக்கிழமை உரையாற்றினார். திமுக, மமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள், ஆளுநர் உரையைப் புறக்கணித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. பேரவைக்கு வெளியே, நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

எதிர்க்கட்சி என்ற முறையில் கடந்த ஆண்டு ஆளுநர் உரையின்போது நாங்கள் சுட்டிக்காட்டிய குறைகளில் எதுவும் சரி செய்யப்படவில்லை. அரசு சார்பில் லட்சக்கணக்கில் செலவிடப்படும் திட்டங்களுக்கான அறிவிப்புகள்கூட முதல்வர் பெயரில்தான் வருகின்றன.

ஆளுநர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் இணைக்கப்பட வேண்டிய பல அம்சங்கள், முதல்வர் பெயரால் முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றன. ஆளுநர் உரையே அவசியமில்லாதது என்று அதிமுக அரசு நிரூபித்து வருகிறது. அதனால்தான் ஆளுநர் உரையை திமுக புறக்கணித்தது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை மமக உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறுகையில், ‘‘2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி, நாகர்கோவில், ஜோலார்பேட்டை போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரித்து தரப்படும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, 2009 தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. அதைக் கண்டிக்கும் வகையில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்’’ என்றார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ‘‘ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாக மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இதைக் கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x