

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் திருப்பிச் செலுத்தி, நாட்டின் முதுகெலும்புகளாக இருக்கும் விவசாயிகளையும், அவர்களது குடும்பங்களையும் வறுமையின் பிடியில் இருந்து மத்திய - மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிதரன், நாகமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன்.
கடந்த 2016 -ல் 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடுத்தும் அதை அதிமுக அரசு கேட்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவையில் இந்த கோரிக்கையை முன் வைத்தேன். அப்போது கூட இந்த அரசு அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய முன்வரவில்லை.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்திய விவசாயப்பெருங்குடி மக்கள் அனைவரும் கடன் தள்ளுபடி என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். திமுகவும் அப்படி நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டது. குறிப்பாக நானே விவசாயிகளுக்காக ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானேன்.
இதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளைச் சேர்ந்த விவசாய அமைப்புகளை எல்லாம் அழைத்து, கூட்டம் நடத்தி அதிலும் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு சங்கக் கடனை மட்டுமல்ல, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அப்போது முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்திடம் கொண்டு சென்று கொடுத்தேன். அந்த தீர்மானங்களின் அடிப்படையில் கூட ஓ.பன்னீர்செல்வம் அன்றைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை. அனைத்து முனைகளிலும் நெருக்கடியில் தள்ளப்பட்டு இதுவரை தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை, குறிப்பாக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அண்டை மாநில விவசாயிகள் எல்லாம் டெல்லி சென்று தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு அளிக்கிறார்கள். நானும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நேரில் சென்று விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றேன்.
ஆனால் இதுவரை தமிழக முதல்வர் விவசாயிகளின் போராட்டத்தை மதித்து, அவர்களை நேரில் சென்று சந்தித்தால் மத்தியில் உள்ள பாஜக அரசு கோபித்துக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தன்னெழுச்சியாக 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தவர் என்பதை நினைவூட்டும் இந்தநேரத்தில், போராடியும் ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தது வேதனையளிப்பதாக இருக்கிறது. விவசாயிகளின் பரிதாபமான நிலைமை மற்றும் அவர்களின் குடும்பங்கள் படும் துயரம் ஆகியவற்றை உணர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் விவசாயக் கடன் தள்ளுபடி உத்தரவு பிறப்பித்து இருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வயிற்றில் இந்த உயர் நீதிமன்ற உத்தரவு பால் வார்த்திருக்கிறது. இதன் பிறகாவது அதிமுக அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றி, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் திருப்பிச் செலுத்தி, நாட்டின் முதுகெலும்புகளாக இருக்கும் விவசாயிகளையும், அவர்களது குடும்பங்களையும் வறுமையின் பிடியில் இருந்து மீட்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.