Published : 07 May 2017 12:18 PM
Last Updated : 07 May 2017 12:18 PM

குந்தா பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

நீலகிரி மாவட்டம் தெற்கு வனக்கோட்டம் குந்தா வனச்சரகத்தில் ஏராளமான சோலை மற்றும் சந்தன மரங்கள் உள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் வனத்தை ஒட்டி தனியார் பட்டா நிலங்களும் உள்ளன. இந்த நிலங்களிலும் நாவல், பலா உள்ளிட்ட மரங்கள் உள்ளன.

இந்நிலையில், இந்த சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சமூக விரோதிகள் காட்டு மரங்கள் மற்றும் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் செல்கின்றனர். இரவு நேரங்களில் வெட்டப்படும் மரங்கள் கெத்தை, முள்ளி வழியாக கேரளாவுக்கும், காரமடைக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

நீண்ட காலமாக சந்தன மரங்கள் கடத்தப்பட்டதால், தற்போது, சில மரங்களே மீதம் உள்ளன. தனியார் பட்டா நிலங்களில் சில்வர் ஓக் மரங்கள் வெட்ட அனுமதி பெற்று, காட்டு மரங்கள் வெட்டப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பேராசிரியர் போ.மணிவண்ணன் கூறும்போது, “தொடர் மரக் கடத்தலால், குந்தா வனத்தில் சொர்ப்ப அளவிலான மரங்களே மீதம் உள்ளன. வனப்பரப்பு குறைந்ததால், வெப்ப அளவு அதிகரித்ததுடன், மழை குறைந்து குந்தா தாலுகாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட மேல் குந்தா பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் இருந்து 100 ஆண்டு பழமையான மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக நேற்று புகார் எழுந்தது.

வெட்டப்பட்ட மரங்கள் ராட்சத கிரேன்கள் உதவியுடன் உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. பழமையான காட்டு மரங்கள் வெட்டப்படுவதால், இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கு பதிவு

குந்தா வனச்சரகர் ராமச்சந்திரன் கூறும்போது, “மேல் குந்தா கிராமத்தில் கே.துரை என்பவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் 300 சில்வர் ஓக் மரங்கள் உள்ளன. அவரது வீட்டின் அருகே அபாயகரமாக உள்ளதாகக் கூறி, கற்பூரம் மற்றும் நாவல் மரங்களை வெட்டியுள்ளார்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்தோம். மரங்களை வெட்ட வனத்துறையிடம் அனுமதி பெறாததால், தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பித்து, அவரது பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


மரங்களை கடத்த பயன்படுத்தப்பட்ட கிரேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x