

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரை விடுவிக்கவும், மீனவர்களின் 75 படகுகளையும் உடனடியாக மீட்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: "தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் இந்த போக்கை உடனடியாக தாங்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் உள்ள சிறைகளில் 20 மீனவர்கள் ஏற்கனவே சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 6–ம் தேதி 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் சென்ற விசைப்படகு பழுதடைந்த காரணத்தால் நடுக்கடலில் மாட்டிக் கொண்டனர். அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் தமிழக மீனவர்களின் 75 படகுகளும் இலங்கை வசம் உள்ளது. அந்த படகுகளை திரும்பத்தராததால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மழை காலம் தொடங்கும் முன்பு மத்திய அரசு உடனடியாக தலையிட்டு 75 படகுகளையும் மீட்க உயர்மட்ட அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 10 லட்சம் மீனவர்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஏற்கனவே ஏராளமான மீனவர் நலத் திட்டங்களை செய்துள்ளது.
நீண்ட காலமாக தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்டு அந்த பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத் தருவதே என்பதையும் ஜெயலலிதா ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறார்.
எனவே தாங்கள் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இலங்கை சிறைகளில் உள்ள 24 மீனவர்களையும், 75 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி உரிய அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.