Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM
காங்கிரஸ் கட்சியை யாராலும் தனிமைப்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் ஞானதேசிகன், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சேவா தள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
கடந்த 64 ஆண்டுகளாக சாதி, மத, இன, மொழி பேதமின்றி இந்தியாவை காங்கிரஸ் வழி நடத்தி வருகிறது. ஆளுமையும் ஆற்றலும் சிந்தனைத் திறனும் காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளன. ஊழல் எதிர்ப்பு என்பது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். ஊழல் இல்லாத தேசத்துக்காக ஐந்து மசோதாக்களை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வர இருக்கிறது. அவற்றை பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கலாம்.
இந்த மசோதாக்கள் பற்றி மக்களிடையே விளக்கும் வகையில், வரும் 4-ம் தேதி பதாகைகளுடன் மாநிலம் முழுவதும் பேரணி நடத்தப்படும். 12-ம் தேதி பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும்.
காங்கிரஸை தனிமைப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் யாராலும் காங்கிரஸை தனிமைப்படுத்த முடியாது.
100 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளுக்கு வழிகாட்டும் இயக்கமாக வலுவான கட்சியாக தொடர்ந்து செயல்படும்.இவ்வாறு ஞானதேசிகன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT