Published : 21 Feb 2017 08:09 AM
Last Updated : 21 Feb 2017 08:09 AM

2009-ம் ஆண்டு நடந்த தடியடியைக் கண்டித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

உயர் நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 2009 பிப்.19-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் உயர் நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

போலீஸாரின் இந்த தடியடி சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் பிப்.19-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.

இந்தாண்டு பிப்.19-ம் தேதியான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கருப்பு தினத்தை அனுசரிக்கும் விதமாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று (பிப்.20) நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று காலை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீஸாரைக் கண்டித்து ஊர்வலம் வந்தனர். பின்னர் ஆவின் வாயில் அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் மோகனகிருஷ்ணன் பேசும்போது, ‘‘வழக்கறிஞர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அப்போதைய போலீஸ் ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போது இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அந்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். வழக்கறிஞர்களைத் தாக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x