Published : 28 Mar 2014 11:09 AM
Last Updated : 28 Mar 2014 11:09 AM

வரி விலக்கு சலுகையை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி விலக்கு பெறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சலுகையை யாரேனும் தவறாகப் பயன்படுத்துவது தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் எஸ்.சரவணன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். கேரள மாநிலத்தில் செயல்படும் வேத ரக்ஷ்ன சமிதி உள்ளிட்ட சில அமைப்புகள் வருமான வரிச் சட்டத்தின் 80-ஜி பிரிவின் கீழ் வருமான வரி செலுத்துவதற்கு விலக்கு பெற்றுள்ளன. ஆனால் அந்த அமைப்புகள் வசூலிக்கும் நன்கொடைகள் அறக்கட்டளை பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, மத ரீதியான செயல்பாடுகள் உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்கு செலவிடப்படுகின்றன.

ஆகவே, அறக்கட்டளை பயன்பாட்டுக்காக நன்கொடை பணத்தைப் பயன்படுத்தாத அந்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள வருமான வரி விலக்கு சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் சரவணன் கோரியிருந்தார்.

இந்த மனு மீது தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “80-ஜி பிரிவின் கீழ் வருமான வரி செலுத்த விலக்கு பெற்றுள்ள அமைப்புகள் தாக்கல் செய்யும் வருமான வரி கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்பது பற்றி வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்திட வேண்டும்.

வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது தவறாகப் பயன்படுத் தப்பட்டுள்ளதாக தெரிய வந்தால், அத்தகைய அமைப்புகளுக்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x