Published : 02 Mar 2017 10:17 AM
Last Updated : 02 Mar 2017 10:17 AM

இயற்கை எரிவாயு எடுக்க தடை விதிக்கக் கோரி முதல்வருடனான சந்திப்புக்கு பிறகும் தொடரும் போராட்டம்

இயற்கை எரிவாயு எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் தமிழக முதல்வரை போராட்டக் குழு நேற்று நேரில் சந்தித்த பிறகும் நெடுவாசலில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. சென்னை சென்ற குழு திரும்பி வந்தபின் அவர்களுடன் ஆலோசனை செய்த பிறகே முடிவை அறிவிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கண்டித்து பொதுமக்கள் பிப்.16-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஆதரித்து உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் வருகை தந்து போராட்டக் களத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

நெடுவாசல் போராட்டக் களத்தில் சென்னையைச் சேர்ந்த புத்தர் தப்பாட்டக் கலைக்குழு சார்பில் தப்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்டோருக்கு, சைவ உணவு சமைத்து பரிமாறப்பட்டது. இதேபோல, கோட்டைக்காட்டிலும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் எரிவாயு திட்டத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி, நெடுவாசல் கிராமத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சி.வேலு தலைமையில் 11 பேர் கொண்ட குழு சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்தது. அப்போது, மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என முதல்வர் உறுதியளித்துள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியான பிறகும்கூட நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. மாறாக, மத்திய அரசிடம் இருந்து உரிய அறிவிப்பு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றும், சென்னைக்கு சென்றுள்ள குழுவினர் ஊருக்கு வந்த பின், அவர்களுடன் ஆலோசனை செய்த பிறகே உரிய முடிவை அறிவிப்போம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x