Published : 09 Jun 2016 10:34 AM
Last Updated : 09 Jun 2016 10:34 AM

குளிர்சாதன பொருட்களின் உபயோகத்தை குறைக்கும் மரங்கள்: பழ மரங்களை வளர்த்தால் விலங்கு, பறவைகளுக்கு உதவலாம்

வீடுகள்தோறும் மரங்களை வளர்த்தால், வளி மண்டலத்தின் சராசரி வெப்ப அளவு குறைந்து வீடுகளில் குளிர்சாதனப் பொருட்களின் உபயோகம் தானாகவே குறையும் என உயிரியல் துறை ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மரங்கள் காடுகளின் நுரையீரல். எண்ணிலடங்கா பயன்களைக் கொண்ட மரங்களின் முக்கியத் துவத்தை, பண்டைய காலம் முதலே நமது முன்னோர் தெரிந்து வைத்திருந்தனர். அதனாலேயே, சாலைகளின் இருபுறமும், வீடுகளின் முன்பும் மரங்களை வளர்த்து இயற்கை என்னும் வீட்டை பராமரித்து வந்துள்ளனர். இடையில் அரை நூற்றாண்டு காலம் வளர்ச்சி என்ற பெயரில் பொருளாதார அபிவிருத்தி, சாலைகள், கட்டிடங்களுக்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

அதனால், ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால், மழை அளவு குறைந்து இயற்கை என்னும் நம்முடைய வீட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், சமீப காலமாக மக்களிடையே மரங்களைப் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகி உள்ளது. தனியார் நிறுவனங்களில் இலவசமாக வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்குவதற்கு பதில் மரக்கன்றுகள் விநியோகம் செய்வது முதல் விழாக்களில் மரம் நடும் நிகழ்ச்சி தவறாமல் இடம்பெறுவது, தற் போதைய தலைமுறையினரிடம் இயற்கையைப் பாதுகாக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், வீடுகள்தோறும் மரக் கன்றுகள் வளர்க்கும் ஆர்வம், தற்போது பொதுமக்களிடம் மேலோங்கி உள்ளது.

இதுகுறித்து காந்திகிராமம் பல்கலைக்கழக உயிரியியல் துறை உதவி பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ராமசுப்பு கூறியதாவது:

அதிகப்படியான கார்பன்-டை ஆக்ஸைடு வளி மண்டலத்துக்கு கேடு விளைவிக்கும். இந்த கார்பன்-டை ஆக்ஸைடு வாகனப் புகையால் ஏற்படுகிறது. மரங்கள் நைட்ரஜன் ஆக்ஸைடு, அம் மோனியா, சல்பர் ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை உறிஞ்சு கின்றன. ஒரு ஹெக்டேர் அளவில் வளர்க்கப்படும் மரங்கள் 26,000 மைல்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் நச்சு வாயுவை உறிஞ்சு வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின் றன. ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் வளர்ச்சியடைந்த மரங்கள் 18 பேருக்குத் தேவையான ஆக்ஸி ஜனைக் கொடுக்க முடியும்.

மரங்கள் குறைவான நீரை மண்ணின் மேற்பரப்பில் உறிஞ்சு வதோடு, இலைகள் மூலம் நீரை வெளியேற்றி வளி மண்டலத்தை குளிர்ச்சிப்படுத்துகின்றன. இதன் மூலம் வளி மண்டலத்தின் சராசரி வெப்ப அளவு வெகுவாகக் குறையும். வீடுகளில் குளிர்சாதனப் பொருட்களின் உபயோகம் தானாகவே குறையும்.

சூரிய வெப்பத்தால் உமிழப்படும் புற ஊதாக் கதிர்களை கவர்ந்து, அதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தோல் புற்றுநோயை வர விடாமல் மரங்கள் தடுக்கின்றன. மரங்கள் அடர்ந்த பகுதியில் வசிப்பதன் மூலம் மன நோய் களையும் குணப்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டள்ளது.

உணவாகவும், மரப்பொருட்கள் செய்யவும், மூலிகைப் பொருட் களாகவும் பயன்படும் இந்த மரங்களை வளர்ப்பதன் மூலம் வருமானமும் பெருகும். மரங்கள் உயர்ந்த மலைகளில், ஆற்றின் பிறப் பிடங்களுக்கான ஆதாரமாகவும் விளங்குகிறது. நம் எல்லோரிடமும் எத்தகைய மரங்களை வளர்ப்பது நகர வாழ்க்கைக்கும், கிராம வாழ்க்கைக்கும் உகந்த மரங்கள் எவை என்ற கேள்வி எழுகிறது.

பொதுவாக வீட்டின் அழகைக் கூட்டுவதற்காக உறுதியற்ற அழகு மரங்களை வளர்ப்பதைக் காட்டிலும், சிறிதளவு நீர் தேவை யுடன் குறைவான உயரத்துடன் அதிகமான பலன்களைத் தரும் மரங்களை நட்டு பயன் பெறலாம். குறைந்த உயரம் வளரக் கூடிய பழ மர வகைகளான கொய்யா, மா, பலா, சப்போட்டா, நெல்லி, மாதுளை, சீதா, நாவல் போன்ற மரங்களை வீட்டின் அருகே வளர்ப்பதன் மூலம் நாமும் பயன் பெறலாம். இதன்மூலம் பல்வேறு பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் உதவலாம். வீட்டுடன் சிறிது கூடுதலாக இடம் உள்ளவர்கள் வேம்பு, புன்னை, கொன்றை, பூவரசு, சந்தனம், குமிழ், மருது போன்ற மரங்களை நடுவதன் மூலமும் வருவாய் ஈட்ட முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x