முதல்வருக்கு ஆதரவாக இளைஞர்கள் திரள வாய்ப்பு: மெரினா கடற்கரையில் போலீஸார் குவிப்பு
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி கடந்த மாதம் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடந்து விடக்கூடாது என்பதற்காக மெரினா உட்பட 6 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நுண்ணறிவு பிரிவு போலீஸார் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜுக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போலீஸார் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்தனர். சாதாரண உடை அணிந்த போலீஸாரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
