Published : 29 May 2017 08:19 AM
Last Updated : 29 May 2017 08:19 AM

மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு - சென்னை மண்டலம் இரண்டாவது இடம் பிடித்தது

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ள னர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 9-ல் தொடங்கி ஏப்ரல் 29-ல் முடிவடைந்தது. நாடு முழுவதும் 3 ஆயிரத்து 504 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 10 ஆயிரத்து 673 பள்ளிகளில் படித்த 10 லட்சத்து 76 ஆயிரத்து 761 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந் தனர். ஆனால் 10 லட்சத்து 20 ஆயிரத்து 762 மாணவ, மாணவி கள் தேர்வு எழுதினர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை 10.20 மணி அளவில் www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டன. மாணவ, மாணவிகள் இந்த இணைய தளங்களில் சென்று வரிசை எண், பள்ளி எண், தேர்வு மைய எண் கொடுத்து தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

சென்னை மண்டலம்

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர் களில் 82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 83.05 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய அளவில் திருவனந்தபுரம் மண்டலம் 95.62 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 92.60 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடமும், டெல்லி மண்டலம் 88.37 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

அதிக மதிப்பெண்கள்

உத்தரபிரதேச மாநிலம் நொய் டாவில் உள்ள அமிட்டி நொயாடா பள்ளி மாணவி ரக்ஷா கோபால் 500-க்கு 498 மதிப்பெண்கள் (99.6 சதவீதம்) பெற்றுள்ளார். சண்டிகரில் உள்ள டிஏவி பள்ளியைச் சேர்ந்த பூமி சவந்த் 497 மதிப்பெண்கள் (99.4 சதவீதம்) பெற்றுள்ளார். சண்டிகரில் உள்ள பவன் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆதித்யா ஜெயின், மன்னட் லுத்ரா ஆகியோர் 496 மதிப்பெண்கள் (99.2 சதவீதம்) பெற்றுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் பி.சுந்தர்ராமன் 492 மதிப்பெண்கள் (98.4 சதவீதம்) எடுத்துள்ளார்.

அதிக மாணவிகள்

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 63 ஆயி ரத்து 247 மாணவ, மாணவிகள் 90 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல் 10 ஆயிரத்து 91 மாணவ, மாணவிகள் 95 சதவீதம் மற்றும் அதற்குமேல் மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றனர். மாணவர் கள் 78 சதவீதமும், மாணவிகள் 87.50 சதவீதமும் தேர்ச்சி அடைந் துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 9.5 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

கிருஷ்ணகிரி மாணவி சாதனை

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 2 ஆயிரத்து 571 பேர் விண்ணப் பித்திருந்தனர். அதில் 2 ஆயி ரத்து 449 பேர் தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 123 பேர் (86.69 சதவீதம்) தேர்ச்சி அடைந்தனர். 125 பேர் 90 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 95 சதவீதம் மற்றும் அதற்கு மேல் 21 பேர் மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றனர். கிருஷ்ணகிரியில் உள்ள நாலந்தா இன்டர்நேஷனல் பள்ளி மாணவி எம்.வி.தர்ஷனா 483 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அகில இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x