

நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை, கடந்த இரு ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகிறது. சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தது. நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளின் பிரசித்தி பெற்ற உதகை தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்காமல் திரும்புவதில்லை. மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை, தாவரவியல் பூங்காவின் நுழைவுச்சீட்டு விற்பனையை கொண்டு கணக்கிடப் படுகிறது.
இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் 22 லட்சத்து ஆயிரத்து 298 பேர் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2012ம் ஆண்டு 21 லட்சத்து 65 ஆயிரத்து 247 ஆக குறைந்துள்ளது. 36 ஆயிரத்து 51 பேரின் வருகை 2011ம் ஆண்டை விட குறைந்தது. இந்நிலையில், கடந்தாண்டு 2013 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 20 லட்சத்து 88 ஆயிரத்து 74 பேரின் வருகை பதிவாகியுள்ளது.
இது கடந்த 2012ம் ஆண்டை விட 77 ஆயிரத்து 173 பேர் குறைவாகும். 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 224 பேர் குறைவு.
முதுகெலும்பு
மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது தேயிலை மற்றும் சுற்றுலா. இந்தியாவில் காஷ்மீரை அடுத்து அனைவரையும் ஈர்த்த சுற்றுலா ஸ்தலம் நீலகிரி. இதனால் ஏழைகளின் காஷ்மீர் என உதகை அழைக்கப்படுகிறது. காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கியதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் உயர்ந்தது. குறிப்பாக கோடை காலத்தில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக, கேரளா மாநிலத்தவரும், இரண்டாம் சீசனான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேனிலவு ஜோடிகள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் பேர் வருவர்.
வசதி குறைவு
நீலகிரி ஆவண மைய நிர்வாகி வேணுகோபால் கூறியதாவது:
நீலகிரிக்கு ஆண்டுதோறும் 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் சுற்றுலா குறித்து திட்டம் இது வரை வரையறுக்கப்படவில்லை. குறிப்பிட்ட வகுப்பினரை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அனைத்து பிரிவு மக்களும் வந்து செல்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். உதகையை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், குன்னூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
சுற்றுலாவை தரம் பிரித்து மருத்துவம், விளையாட்டு சுற்றுலாக்களை திட்டமிட வேண்டும். உதகையில் நிரந்திரமாக பொருட்காட்சி நடத்த ஏற்பாடு செய்யலாம். பன்னாட்டு நிறுவனங்களின் கருத்தரங்குகள், நீலகிரியில் நடத்துவதற்காக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். உதகையில் ரோஜா பூங்கா உருவாக்கப்பட்ட பின்னர், சுற்றுலா தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. சுற்றுலாப் பயணிகளைக் கவர ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தினால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து பொருளாதாரமும் உயரும் என்றார்.