Published : 04 Dec 2013 09:14 PM
Last Updated : 04 Dec 2013 09:14 PM

ஒருங்கிணைந்த ஆந்திரத்துக்கு ஆதரவு: ஜெயலலிதா, கருணாநிதியுடன் ஜெகன்மோகன் சந்திப்பு

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்துக்கு ஆதரவு கோரி, முதல்வர் ஜெயலலிதாவையும், திமுக தலைவர் கருணாநிதியையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

அப்போது, தமிழகத்தின் இரு தலைவர்களிடத்திலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மாநில முதல்வர்களையும் சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

டெல்லி சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களை சந்தித்து, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்துக்காக ஆதரவு கோரினார். பின்னர், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து போயஸ் தோட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற ஜெகன்மோகன் ரெட்டி, அங்கு கட்சிப் பிரமுகர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பின்னர், போயஸ் தோட்டத்தில் இருந்து சென்னை தலைமை செயலகத்துக்கு பகல் 1.55 மணிக்கு வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்துக்கு ஆதரவு திரட்டினார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. அதைத் தொடர்ந்து, ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை 5.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x