Published : 22 May 2017 10:20 AM
Last Updated : 22 May 2017 10:20 AM

நீலகிரி மாவட்டத்தில் ஒரே இரவில் 532 மி.மீ. மழை பதிவு: கார் மீது மரம் விழுந்து இருவர் காயம்

நீலகிரி மாவட்டத்தில் ஒரே இரவில் 532 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.கடந்த ஒரு மாதமாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது.

குன்னூரில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்தன. குன்னூர் காந்திபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்த கேரள மாநில சுற்றுலா வாகனம் மீது மரம் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.

தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு, குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து, சாலையில் விழுந்துகிடந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து அகற்றினர்.

மேலும், குன்னூர் லேம்ஸ்ராக், டால்பின்ஸ் நோஸ் காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில், அப்பகுதியில் இருந்த மின் கம்பங்களும் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனம் மற்றும் தீயணைப்புத் துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கன மழையால் உதகை, குன்னூரில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்ததால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. உதகையில் பெரும்பாலான பகுதியில் நேற்று மதியம்தான் மின் இணைப்பு சீரானது.

மழை அளவு (மி.மீ.):

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே இரவில் 532 மி.மீ. மழை பதிவானது.

உதகை 75, கிளன்மார்கன் 75, குன்னூர் - 40.10, கூடலூர் - 50, குந்தா - 17, கேத்தி - 26, கோத்தகிரி - 35, நடுவட்டம் - 52, அப்பர்பவானி - 31, எமரால்டு - 19, அவலாஞ்சி - 21, கோடநாடு 50.

நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x