Last Updated : 02 Oct, 2013 11:00 AM

 

Published : 02 Oct 2013 11:00 AM
Last Updated : 02 Oct 2013 11:00 AM

அருங்காட்சியகத்தை பாதுகாப்பது அவசரக் கடமை!

தமிழக பொதுப்பணித் துறைக்கு 150 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இதையொட்டி, சேப்பாக்கம் பறக்கும் ரெயில் நிலையம் எதிரே, எழிலகத்தின் பின்புறம் வட்டவடிவில் மிகவும் நேர்த்தியாக பொதுப்பணித் துறையின் 150-வது ஆண்டு நினைவு நூலகம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.

சிவில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் இங்கு கிடைக்கின்றன. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்குச் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்தைக் காண வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சனிக்கிழமை மட்டுமாவது திறந்துவைக்க திட்டமிட்டு வருகிறோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

அரிய புகைப்படங்கள்

அருங்காட்சியகத்துக்கு உள்ளே நுழைந்ததும், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய இங்கிலாந்து நாட்டு பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் உருவப்படம் நம்மை வரவேற்கிறது.

அருங்காட்சியகத்தின் தரைத் தளத்தில், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நினைவிடங்கள், சென்னையில் புதிதாக கட்டப்பட உள்ள விருந்தினர் மாளிகை மற்றும் கலைவாணர் அரங்கத்தின் மாதிரி புகைப்படங்கள் ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையான சென்னை அரசு பொது மருத்துவமனை, என பிரமாண்டமான கட்டிடங்கள் அவற்றில் காட்சியளிக்கின்றன.

அணைகளின் விவரம்

முதல்தளத்தில், தமிழகத்தில் உள்ள அணைகளின் விவரங்கள் தனித்தனியாக எழுதி வைக்கப்ப ட்டுள்ளன.

ஒவ்வொரு அணையின் பெயர், எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, அணை அமைந்துள்ள பகுதி, அருகில் உள்ள நகரம், அணையின் மொத்த நீர்மட்டம், கொள்ளளவு, அணையின் நீர்பிடிப்புப் பகுதிகள் என மொத்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

அனைத்து தகவல்களும் ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டு உள்ளன. தமிழிலும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பலர் பேசியதைக் கேட்க முடிந்தது.

தொழில்நுட்ப நூலகம்

அருங்காட்சியகத்தின் தரைத்தளத்தில் சிவில் என்ஜீனி யரிங் மாணவர்களுக்குப் பயன்படும் புத்தகங்களுடன் தொழில்நுட்ப நூலகமும் செயல்ப டுகிறது. அணையின் வரலாறு பற்றிய புத்தகங்கள் உள்பட எல்லா நூல்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் சிவில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களையும் இந்த நூலகத்தில் வைக்கலாம்.

அருங்காட்சியகத்துக்கு உள்ளே யும், வெளியேயும் பல குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

ஓடாத மின்விசிறிகள்

முதல்தளத்தில் 2 இடத்தில் கண்ணாடி உடைந்து கிடக்கின்றன. பார்வையாளர்கள் நடந்து செல்லும் மார்பிள் பதிக்கப்பட்ட தரைப்பகுதி தூசி மண்டிக் கிடக்கிறது. மூடப்பட்ட அரங்கமாக இருப்பதால் மின்விசிறி இயங்க வேண்டியது கட்டாயம். ஒருமாதமாக மின்சப்ளை இல்லை என்று பணிபுரிபவர்கள் கூறுகின்றனர். மின்விசிறிகள் இயங்காததால் முதல்தளத்தில் அதிகநேரம் நின்று கொண்டு அணைகளின் விவரத்தைப் பார்க்க முடியவில்லை என்று ஒரு கல்லூரி மாணவி கூறினார்.

அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் சிதறிக் கிடக்கும் மதுப்பாட்டில்கள், சிகரெட்டு துண்டுகள், இயற்கை உபாதையைக் கழித்ததற்கான சுவடு போன்றவை அங்கு சமூக விரோத செயல்கள் நடந்து விடலாம் என்பதற்கான சாட்சியாக உள்ளன. அருங்காட்சியகத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. உள்ளேயும், வெளியேயும் பாழாகி வரும் அருங்காட்சியகத்தை பாதுகாப்பது பொதுப்பணித் துறையின் அவசரக் கடமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x