Published : 08 Feb 2014 12:00 AM
Last Updated : 08 Feb 2014 12:00 AM

தங்கசாலை மேம்பாலம் திறக்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்- கட்டி முடித்தும் திறக்காத நிலை

கட்டி முடித்து பல மாதங்களாகியும் திறக்கப்படாத தங்கசாலை மேம்பாலம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப் பாதை ஆகியவற்றை உடனே திறக்கக் கோரி வடசென்னையில் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தங்கசாலை மேம்பாலம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப் பாதை பணி தொடங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பணிகள் மெதுவாக நடைபெற்றுவந்தன. நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் இவற்றை உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என வலியுறுத்தி வடசென்னை திமுக சார்பில் தங்கசாலை மேம்பாலம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில், வடசென்னை மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் பங்கேற்று தமிழக அரசு, மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

வடசென்னை மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.23 கோடியில் தங்கசாலை மேம்பாலம் கட்ட 2009-ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதே போல்

ரூ.15.76 கோடியில் ஸ்டான்லி சுரங்கப் பாதை அமைக்கவும் அவர் அடிக்கல் நாட்டினார். ஆனால், இவை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடாமல் மாநகராட்சியும், அரசும் காலம் தாழ்த்தி வருகிறது.

எனவே, வடசென்னை மக்கள் போக்குவரத்து நெரிசலால் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். குறிப்பாக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். உடனடியாக இவற்றை மாநகராட்சி திறக்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தினால், தங்கசாலை மேம்பாலம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப் பாதையில் திமுகவினரே பயணித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடுவோம்.

திமுக ஆட்சிக் காலத்தில் 21 மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு 12 இடங்களில் மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகள் கட்டி முடிக்கப்பட்டன. தற்போதைய மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளாகியும், மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக இன்னும் ஆய்வுப் பணிகள்தான் நடப்பதாக கூறுகிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x