Published : 11 Apr 2017 10:01 AM
Last Updated : 11 Apr 2017 10:01 AM

தெருக்கூத்து ஆய்வின் முன்னோடி: பேராசிரியர் அறிவுநம்பிக்கு புகழஞ்சலி

தமிழ் ஆய்வுலகம் கால ஆராய்ச்சியிலும், இலக்கிய நயம் பாராட்டுவதிலும், இலக்கணப் பூசல்களிலும், சிற்றிலக்கிய ஆய்வுகளிலும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை நாட்டுப்புறவியல் துறைக்கு உயிரோட்டம் கொடுத்தார். அவரின் மாணவரான அ.அறிவுநம்பிக்கு தெருக்கூத்துத் தொடர்பான தலைப்பினைத் தந்து, ஆய்வுசெய்ய பணித்தார்.

சங்க இலக்கிய ஈடுபாடும், சமய ஈடுபாடும் கொண்டிருந்த அறிவு நம்பிக்கு தெருக்கூத்துத் தலைப்பு தந்தவுடன், தமிழகத்தில் தெருக் கூத்து நடைபெறும் இடங்களுக் கெல்லாம் களப்பணியாக அலைந்து திரிந்து, ஆய்விற்குரிய குறிப்புகளைச் சேகரித்தார். தமிழ் ஆய்வுலகம் இதுவரை கண்டிராத பல புதிய செய்திகளை தம் மாணவர் சேகரித்து வந்துள்ளதை வெகுவாகப் பாராட்டினார் நெறி யாளர் சண்முகம்பிள்ளை. நெறி யாளரின் மொழிகளால் ஊக்கம் பெற்ற அறிவுநம்பி, தெருக்கூத்து ஆடும் அளவுக்குப் பயிற்சி பெற் றிருந்தார்.

திடீர் மறைவு

வலிமையான ஆய்வினை நிகழ்த்திய தம் மாணவருக்கு, மதுரை காமராசர் பல்கலைக் கழகம் விரிவுரையாளர் பணி கொடுத்து மகிழ்ந்தது. ஐந்தாண்டு கள் மதுரையில் பணிபுரிந்த அறிவு நம்பிக்கு புதுவைப் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியர் பணி கிடைத்தது. முப்பத்தொரு ஆண்டுகள் புதுவைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அ.அறிவுநம்பி, இன் னும் இரண்டு மாதத்தில் ஓய்வுபெற இருந்த நிலையில், திடீரென உடல்நலம் குன்றி, 09.04.2017-இல் அவர் இயற்கை எய்தியது தமிழ் இலக்கிய உலகத்தை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பூ.அமிர்தலிங்கம்- இராசலட்சுமி தம்பதியினருக்கு 10.11.1952-இல் மகனாக பிறந்தவர் அறிவுநம்பி. ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். கவியரசு முடியரசனார், புலவர் ஆ.பழனி உள்ளிட்டவர்கள் இவருக்கு ஆசிரி யப் பெருமக்களாக விளங்கினர். அழகப்பர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பை நிறைவு செய்த பின்னர் முதுகலைத் தமிழ் இலக் கியம் பயின்றவர்.

நாட்டுப்புறவியல், சங்க இலக்கி யம், காப்பியங்கள் உள்ளிட்ட துறைகளில் பன்முகப் புலமை பெற்றவர். அறிவுநம்பியின் முன் னோர்கள் இராமநாதபுரம் அரண் மனையின் அரசவைப் புலவர்களாக விளங்கியவர்கள். மரபுவழியாகக் கிடைத்த தமிழறிவும், பல்கலைக் கழகங்களில் பெற்ற பேரறிவும் அறிவுநம்பியைப் புகழ்பெற்ற கல்வியாளராக மாற்றியது.

அறிவுநம்பி தன் மாணவர்களை உடன்பிறந்தவராக எண்ணிப் பழகும் இயல்புடையவர். எளிமையும் அன்பும் இவரிடம் இருந்த உயர் பண்புகளாகும். புதுதில்லி முதல் குமரிமுனைவரை உள்ள தமிழ்த் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், கல்விக்குழுக்கள்,ஆய்வறிஞர் குழுக்களில் இடம்பெற்றிருந்தவர். ஆண்டுக்கு ஒரு நூல் எழுதி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இவர்தம் நூல்கள் அரசுப் பரிசில்களை யும், இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்ற பெருமைக்கு உரியன.

பாரதிக்கு கருத்தரங்கு

பாரதியாருக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பன் னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தி, உலக அளவில் இருக் கும் பாரதி ஆய்வாளர்களை ஒன்றி ணைத்து அனைவரின் பாராட்டை யும் பெற்றவர். புதுவைப் பல் கலைக்கழகத்தில் பொறுப்புத் துணைவேந்தராகவும், இயக்கு நராகவும், தமிழியல் துறைத்தலை வராகவும் பணிபுரிந்தவர். புதுச் சேரியில் இயங்கிவரும் புதிமம் என்ற திருக்குறள் பரப்பும் அமைப் பின் செயலராகவும் இருந்து தமிழ்ப் பணி புரிந்தவர்.

பதினைந்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டுப் பயணங்களை மேற் கொண்டு ஆய்வரங்கில் கட்டுரை படித்தவர். அமெரிக்காவில் நடை பெற்ற புறநானூற்று மாநாட்டில் இவர்தம் கட்டுரை முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கத் தமிழர்களால் பாராட் டப்பட்டது. இங்கிலாந்து, பிரான்சு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று ஆய்வரங்குகளில் ஆய்வுரை வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.

அறிவுநம்பி சமூகம் சார்ந்த சிந் தனைகளை முன்வைத்துப் பல் வேறு இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தவர். எளி மையும் தெளிவும் கொண்டவை இவரின் கட்டுரைகள். எழுத்துத் துறையிலும் மேடைப்பேச்சிலும் அறிவுநம்பி தேர்ந்த கலைஞராக விளங்கியவர். நகைச்சுவை கலந்து பேசும் இவருடைய பேச்சைக் கேட்பதற்கு மாணவர் கூட்டம் ஒவ் வொரு கல்லூரியிலும் உண்டு. வகுப்புகளை நகைச்சுவையுடன் கொண்டுசெல்லும் பேராற்றல் பெற்றவர். கவிதை எழுதுவதிலும் ஆற்றல்பெற்றவர்.வானொலி, தொலைக்காட்சிகளுக்காக நேர் முக வருணனை செய்வதிலும் கைதேர்ந்தவர்.

கடைசி ஆவணம்

தம் ஆசிரியர்களின் மேல் மிகுந்த நன்றியுணர்ச்சியும், மரியாதையும் கொண்டவராகப் பேராசிரியர் அறிவுநம்பி விளங்கினார். தம் பேராசிரியரான வ.சுப.மாணிக்கம் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவதில் ஆர்வம்கொண்டு சில பணிகளைத் திட்டமிட்டுச் செய்து கொண்டிருந்தார். வ.சுப.மாணிக்கம் குறித்த நூலொன்றினை மூன்று நாளுக்கு முன்பாக எழுதி முடித்து, அச்சுக்கு அனுப்பியிருந்தார். அந்த நூலே அறிவுநம்பியின் வாழ்க்கைத் தடயத்தைக் காட்டும் கடைசி ஆவணமாக அமைந்துவிட்டது. புதுவைப் பல்கலைக்கழகம் ஒரு அறிவுக்கலங்கரை விளக்கினை இழந்து நிற்கிறது.

கட்டுரையாளர்:

முனைவர் மு.இளங்கோவன்,

உதவிப் பேராசிரியர் (தமிழ்த் துறை)

கா.மா. பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x