Published : 20 Apr 2017 05:02 PM
Last Updated : 20 Apr 2017 05:02 PM
ஓபிஎஸ் அணியினர் அளித்த மனுவை திரும்பப் பெற்றாலே இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும் என்று அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''பேச்சுவார்த்தைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாங்கள் சுமுகமாக நடத்தத் தயார். ஓ.பன்னீர்செல்வம் அணிதான் நிபந்தனை விதிக்கின்றனர்.
நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்கள் தரப்பில் எந்தக் குழப்பமும் இல்லை. ஒன்றிணைந்து ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
ஜெயலலிதா மரணத்தின் போது ஓபிஎஸ்தான் முதல்வராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் அப்போதே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தியிருக்கலாம்.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற முடியாது. ஓபிஎஸ் அணியினர் அளித்த மனுவை திரும்பப் பெற்றாலே இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும்.
இழந்த இரட்டை இலை சின்னத்தைப் பெற்று, ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி நான்கு ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தினகரன் விலகலில் நாடகம் இல்லை. நாங்கள் விலகச் சொல்லி வற்புறுத்தியதும் தானாக ஒதுங்கிவிட்டார்'' என்று வைத்திலிங்கம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT