டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்: திருப்பூரில் தடியடி, வேலூரில் கடை சூறை - பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஏடிஎஸ்பி

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்: திருப்பூரில் தடியடி, வேலூரில் கடை சூறை - பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஏடிஎஸ்பி
Updated on
3 min read

தமிழகத்தின் பல பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டம் நடத்திய பெண் களை மாவட்ட ஏடிஎஸ்பி கண்மூடித் தனமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பாட்டில்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி கடையை சூறையாடினர்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த 3,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மாற்று மதுக்கடைகள் அமைக் கப்படுவதைக் கண்டித்து தமிழகத் தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது சாமளாபுரம். இங்கு, நெடுஞ்சாலை யோரம் இருந்த 3 டாஸ்மாக் மதுக்கடைகள் சமீபத்தில் மூடப் பட்டன. அதற்குப் பதிலாக, புதிய மதுக்கடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதையறிந்த பொது மக்கள் சோமனூர் - காரணம் பேட்டை சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சூலூர் எம்எல்ஏ கனகராஜும் மக்களின் கோரிக்கையை ஏற்று போராட்டக் களத்துக்கு வந்தார். சுமார் 9 மணி நேரம் போராட்டம் நடந்தும், அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. மாலை 4 மணி அளவில் அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீஸார் உத்தரவிட்டனர்.

திடீர் தடியடி

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸாரும், அதிரடிப் படையினரும் மாலை 5 மணி அளவில் திடீரென தடியடி நடத்தினர். போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந் தனர். தடியடி நடத்திய போலீஸார் மீது கற்களை வீசி பொதுமக்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

தடியடியின்போது, அய்யம் பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரை திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கொடூரமாக தாக்கினார், சாமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷ் என்பவருக்கு மண்டை உடைந்தது.

திருப்பத்தூரில் கடை சூறை

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன பேராம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வந்தது. பொதுமக்களின் எதிர்ப் பையும் மீறி மதுபானக் கடை நேற்று காலை திறக்கப்பட்டது. இதை யறிந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில் களை வெளியே வீசி நொறுக்கினர்.

போலீஸ் தடியடியில் காயமடைந்தவரை மீட்டு அழைத்துச் செல்லும் மக்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து 176 கடைகள் மூடப்பட்டன. இதனால் மாற்று இடங்களில் கடை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக மீஞ்சூர் அருகே அனுப்பம்பட்டு பகுதியில் டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட இருந்தது. இதை அறிந்த அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், அக்கரைமேடு, ஏரிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலை 11 மணி அளவில், சம்பந்தப்பட்ட கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு, 8 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்துக்கு நேற்று மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக் கானோர் போராட்டத்தில் ஈடுபட்ட தால் ஒரே நாளில் அந்த கடை அகற்றப்பட்டது.

வேதாரண்யம் அடுத்த அண்ணாபேட்டையில் அரசுப் பள்ளி, வாரச்சந்தை, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 2-ம் தேதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் கடை அகற்றப்படாததால், மகளிர் குழுவினர், பொதுமக்கள் நேற்று கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

அரவக்குறிச்சி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை, ராஜபுரம் பிரிவு சாலை பகுதிக்கு மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கடையை நேற்று முற்றுகையிட்ட பாமகவினர் 74 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே நெடுஞ்சாலையில் செயல் பட்ட கடை, மூலிமங்கலம் அருகே கிலுவங்காடு பகுதிக்கு மாற்றப் பட்டது. இதைக் கண்டித்து, அக்கடையை நேற்று முற்றுகை யிட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

15 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த செம்பட்டி விடுதியில் ஏற்கெனவே ஒரு டாஸ்மாக் கடை உள்ள நிலையில், மேலும் ஒரு கடை திறக்க உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்ற விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் அருகே சாமளாபுரம் அய்யன்கோயில் சாலையில், புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் நான்கு சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஏடிஎஸ்பி நடத்திய தாக்குதலை கண்டித்து, காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை போராட்டக்காரர்கள் நேற்று மாலை தொடங்கினர்.

மீண்டும் தொடங்கியது காலவரையற்ற போராட்டம்

திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததில் அய்யம் பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் பலத்த காயமடைந்தார். சாமளா புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல், போலீஸார் தடியடி நடத்தியதில் தலையில் பலத்த காயமடைந்த சாமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷ் என்பவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தப் போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸார் தடியடியில் படுகாயம் அடைந்தனர். அவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக் கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

ஏடிஎஸ்பி பாண்டியராஜன், தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் டிஎஸ்பி மனோகரன், காவல் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வேண்டும். காயம்பட்ட வர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக போராட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in