Published : 22 Jul 2016 02:29 PM
Last Updated : 22 Jul 2016 02:29 PM
ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இத்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், சம்பளத்தை கால தாமதமின்றி தொடர்ந்து வழங்க வேண்டும், பொறுப்புக்கான படி, தேர்வு நிலை சிறப்பு நிலை பிரிவு, பதவி உயர்வு வழங்க வேண்டும், அலுவலக உதவியாளர்களுக்கு தர ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பது போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டங்களில் போராட்டங்களும், உண்ணாவிரதமும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் தமிழக அரசு ஊராட்சித் துறையில் பணிபுரிபவர்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுமார் ஓராண்டுக்கு முன்பு அறிவித்திருந்தது.
ஆனால், இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இச்சூழலில் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதால், அது குறித்த அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் செயலர், இளநிலை உதவியாளர், முழு ஊரக சுகாதார ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், கணினிப் பணியாளர்கள் ஆகியோர்கள் உள்ளிட்ட அத்துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT