Published : 02 Jun 2016 08:22 AM
Last Updated : 02 Jun 2016 08:22 AM

தஞ்சையில் பேருந்து மோதி தந்தை, மகள், மகன் பலி

தஞ்சாவூர் அருகே உள்ள தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(38). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மலர்மாலினி(30). மகள் பிரியதர்ஷினி(9), மகன் புகழ்(5). இவர்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் வசித்து வந்தனர்.

தனது குழந்தைகளுக்கு காலணி வாங்குவதற்காக சந்திரசேக ரன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கி ளில் நேற்று பிற்பகல் கீழவீதிக்குச் சென்றுகொண்டிருந்தார். தஞ்சை மேம்பாலத்தில் சென்றபோது, மோட் டார் சைக்கிள் மீது, எதிரே வந்த சுற்றுலாப் பேருந்து மோதியது.

இதில் சந்திரசேகரன், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பிரியதர்ஷினி, புகழ் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மலர்மாலினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தஞ்சாவூர் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய தனியார் பேருந்தின் ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.

மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிரியதர்ஷினி 4-ம் வகுப்பும், புகழ் ஒன்றாம் வகுப்பும் படித்தனர். கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று (ஜூன் 1) பள்ளி திறந்த முதல்நாளில், அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு, மதியம் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, சீருடைக்கான புதிய காலணிகள் வாங்கச் சென்றபோது விபத்தில் சிக்கி 2 குழந்தைகளுடன் தந்தை உயிரிழந்தது, தஞ்சை பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x