Published : 17 Mar 2014 04:59 PM
Last Updated : 17 Mar 2014 04:59 PM

ஓரிரு தினங்களில் பாஜக கூட்டணி அறிவிப்பு: முரளிதர ராவ்

கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை 99.5 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. இந்தக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்பது உறுதியான ஒன்று.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. பாஜகவின் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் 99.5 சதவீதம் பூர்த்தியடைந்துவிட்டன. இந்த விவரங்கள் டெல்லி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு ஓரிரு தினங்களில் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார் முரளிதர ராவ்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இன்னும் நீடித்து வருகிறது,

பாமக, கொதேமக ஆகிய கட்சிகள் குறிப்பிட்ட சில தொகுதிகளை விட்டுக் கொடுக்காமல் கேட்டு வருவதால், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் பாஜகவின் தமிழகத் தலைவர்கள் திணறி வருகின்றனர்.

அதேவேளையில், 'தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது, எங்கள் கட்சியின் தேசிய தலைமைதான் முறைப்படி அதை அறிவிக்கும' என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகளோ தொடர்ந்து பேசி வருவதாக சொல்கின்றன. இதனால், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x