Published : 09 Jun 2017 12:58 PM
Last Updated : 09 Jun 2017 12:58 PM

சென்னையில் 1 மாதம் விவசாயிகள் தொடர் போராட்டம்: அய்யாக்கண்ணு தலைமையில் தொடங்கியது

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இன்று போராட்டம் தொடங்கியது.

முன்னதாக ஜூன் 9-ம் தேதி முதல் 1 மாதம் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார். அதன்படி இன்று விவசாயிகள் போராட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெறும் விவசாயிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜூன் 2-ம் தேதி கலந்துகொண்ட அய்யாக்கண்ணு, ''தமிழக விவசாயிகள் போராடிக் கொண்டேதான் இருக்கின்றனர். அவர்கள் எவ்வளவுதான் போராடினாலும் மத்திய, மாநில அரசுகள் மதிப்பதில்லை. தேர்தல் காலத்தில் நீங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு எனக் கூறுபவர்கள், வெற்றிபெற்றவுடன் விவசாயிகளை அடிமைகளாகப் பார்க்கின்றனர்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது, தமிழக முதல்வர் எங்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, பிரதமரைச் சந்தித்துப் பேசுவதாக தமிழக முதல்வர் கூறினார். ஆனால், அது என்னவானது என்று தெரியவில்லை.

கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.

கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் ஜூன் 9-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: ம.பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x