

சென்னை கே.கே.நகர் கோட்டம் வீட்டு வசதிவாரிய செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், “சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான மனைகளை அரசு விதிமுறைகளை மீறி, வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரியும் 6 பேர் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் போலியான ஆவணம் மூலம் பதிவு செய்த பத்திரங்கள் அனைத்தும் பத்திரப்பதிவு துறையால் ரத்து செய்யப்பட்டது. வீட்டு வசதி வாரியத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மோசடியில் ஈடுபட்ட மேற்கண்ட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு மீது கமிஷனர் உத்தரவின்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.