Published : 25 Sep 2014 01:38 PM
Last Updated : 25 Sep 2014 01:38 PM
பெண்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாவது அதிகரித்து வருகிறது என சிறுநீரக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். சுரப்பிகள் பற்றிய விழிப்புணர்வு மாதமாக செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சிறுநீரக கற்கள் விழிப்புணர்வு குறித்து அடையாறு போர்டிஸ் மலர் மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவ நிபுணர் பாரி பத்திரிகையாளர்களை புதன்கிழமை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:
முன்பு சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களில் 20சதவீதம் பெண்களாக இருந்தனர். ஆனால், தற்போது கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் பெண்களாக இருக்கின்றனர். கற்கள் உருவாவதற்கு தண்ணீர் உட்கொள்ளும் அளவு, தட்பவெட்பநிலை, உணவு பழக்கம் ஆகிய அனைத்துமே முக்கிய காரணங்கள். அதிக அளவில் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள், எனவே அதிக நேரம் வெயிலில் இருக்கிறார்கள், தண்ணீர் உட்கொள்ளும் அளவு குறைந்து வருகிறது. எனவே பெண்களுக்கு கற்கள் உருவாவது அதிகமாகிறது.
ஒரு முறை கற்கள் உருவாகி விட்டால், அவை மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். தண்ணீரின் அளவை அதிகப்படுத்துவது மட்டுமே கற்கள் உருவாவதை தடுக்கும், மற்றும் குணப்படுத்தும் வழிமுறையாகும். ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிரமம் இல்லாமல், எரிச்சல் இல்லாமல், சூடாக இல்லாமல் சிறுநீர் கழித்தால், உடம்பில் போதுமான அளவு நீர் உள்ளது என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT