Last Updated : 22 Jan, 2014 12:00 AM

 

Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

மாநிலங்களவை தேர்தல்: நாஞ்சில் சம்பத்துக்கு வாய்ப்பு?

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நான்கு அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், பிப்ரவரி 7-ம் தேதி நடக்கிறது. சட்டசபையில் உள்ள பலத்தின்படி ஆளும் அதிமுக கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பது உறுதி. மீதமுள்ள ஒரு இடத்துக்கு திமுக சார்பில் திருச்சி சிவா நிறுத்தப்பட்டுள்ளார். தேமுதிக இன்னும் தனது நிலையை தெரிவிக்கவில்லை.

அதிமுக சார்பில் 4 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஐந்தாவது இடம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கொடநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இறுதி செய்து விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொடநாட்டில் இருந்து

23-ம் தேதி சென்னை திரும்பிய பிறகு, பட்டியலை ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறப் படுகிறது.

மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்றும் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிகிறது. அது வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் உசேனாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த மாநிலங்களவைத் தேர்தலின் போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவுக்காக, போட்டியில் இருந்து விலகிய கு.தங்கமுத்துவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர், குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்து வருகிறார். மேலும் தற்போது பதவிக்காலம் முடியவுள்ள நா.பாலகங்காவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x