

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற் றதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து பெங்களூரு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து கடந்த 2015 ஜூன் 27-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா, 1 லட்சத்து 51 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார் இந்த வெற்றியை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சுயேச்சை வேட்பாளர் டி.சுரேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தேர்தல் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நடந்தது. முதல்வர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜ ரானார். ஆனால், டிராபிக் ராமசாமி ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, சுரேஷ் தொடர்ந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.