Published : 11 Jan 2017 10:51 AM
Last Updated : 11 Jan 2017 10:51 AM

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ஜல்லிக்கட்டுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பு: அலங்காநல்லூரில் குவியும் இளைஞர்கள்

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ஜல்லிக்கட்டு விளையாட்டின் அடையாளமான உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் வாடிவாசல் முன் தமிழகம் முழுவதும் இருந்து வரும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், ‛செல்ஃபி’ எடுத்து செல்கின்றனர்.

தமிழர்களின் கலாச்சார அடையாளமாகவும், வீர விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. கடந்தகாலத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் 1,500 முதல் 2,000 கிராமங்களில் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடக்கும். நீதிமன்ற தடை, நெருக்கடியால் கடந்த 2 ஆண்டாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.

கடைசியாக 2014-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் வெறும் 23 கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடந்தது. காளையம், புளிக்குளம், உம்பலச்சேரி, பர்கூர் காளை இனங்கள்தான் பிரதானமாக ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் களம் இறக்கப்பட்டு வந்தன. இதற்காக, இந்த இனத்தைச் சேர்ந்த 12 லட்சம் ஜல்லிக்கட்டு களைகள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் வளர்க்கப்பட்டன. தற்போது ஜல்லிக்கட்டு தடையால் 3 மாடு, 4 காளைகள் வளர்ப்போர், ஒரிரு காளைகளையும், ஒரிரு காளை வளர்ப்போர் ஒரு காளை கூட தற்போது வளர்க்கவில்லை.

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பும், ஆதரவும் பெருகி வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களுடன் அரசியல் கட்சிகளும், போராட்டங்கள் நடத்த அன்றாடம் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து வரும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள், அலங்காநல்லூர் வாடிவாசல் முன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு உச்சநீதிமன்ற அனுமதி கிடைக்காவிட்டாலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தடையை மீறி போட்டி நடத்தாவிட்டாலும் பயிற்சி நடத்துவதுபோல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தென் மாவட்டங்களில் தடையை மீறி பயிற்சி ஜல்லிக்கட்டு நடக்கும்பட்சத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தில் அரசியல்

இதுகுறித்து தமிழ்நாடு வீர விளையாட்டு மீட்பு கழக மாநிலத்தலைவர் ராஜேஷ் கூறும்போது, “ஜல்லிக்கட்டு என்றால் காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என்ற எண்ணமே நகர்ப்புற மக்களிடம் இருந்தது. தற்போது கிராமங்களை தாண்டி நகரங்கள், சமூக வலைத்தளங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சனை ஏற்படும்போது தீப்பொறியாக இருந்த ஜல்லிக்கட்டு ஆதரவு இந்த ஆண்டு காட்டுத்தீயாக பரவி உள்ளது. ஒரிரு நாளில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காதப்பட்சத்தில் சென்னையைப்போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோல் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள், பொங்கல் முடிந்ததும் மறந்துவிடுகின்றனர். ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தில் அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x