Published : 14 May 2017 07:04 PM
Last Updated : 14 May 2017 07:04 PM
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்துடன் பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாத நிலையில் வேலை நிறுத்தம் நடைபெறும் தொழிற்சங்கங்கள் உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், வேலை நிறுத்த்தத்தை முறியடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது நாளை (திங்கள்) பேருந்துகள் இயங்கும் என்று அவர் கூறியுள்ளார். 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொகையை ஒரே தடவையில் கொடுக்க முடியாது என்றும் செப்டம்பர் வரை போராட்டத்தை ஒத்தி வைக்க தொழிற்சங்கங்களிடம் கோரியதாகவும் ஆனால் தொழிற்சங்கங்கள் இதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கூறியதாவது:
தொழிலாளர்கள் நலனை தொழிற்சங்கங்கள் முக்கியமாகக் கருதவில்லை. வேலை நிறுத்தம் என்ற நோக்கத்தோடு மட்டுமே அவர்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடியுடன் கூடுதலாக ரூ.500 கோடி அளிக்கவும் ஒப்புக் கொண்டோம். ஆனால் 20 ஆண்டுகால நிலுவையை ஒரே நாளில் அளிக்க முடியுமா என்பதை தொழிற்சங்கங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அரசின் நிலைப்பாட்டை 37 தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. 10 தொழிற்சங்கங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ள மறுத்தன. வேலை நிறுத்தம் என்ற ஒரே நோக்கத்தில் தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் திசைத் திருப்புகின்றன.
நாளை சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
வேலை நிறுத்தத்தை முறியடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்துள்ளோம். ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளிட்டோரை பணிக்கு அழைத்து பேருந்துகளை இயக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT