Published : 28 Jun 2019 08:43 PM
Last Updated : 28 Jun 2019 08:43 PM

தங்கதமிழ்ச் செல்வன்: டிடிவியின் போர்ப்படை தளபதி திமுகவில் ஐக்கியமான கதை

ஜெயலலிதா இருந்தபோது செல்வாக்காகவும், சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாகவும், டிடிவி தினகரனின் வலதுகரமாகவும் விளங்கிய தங்கதமிழ்செல்வன் திமுகவில் ஐக்கியமானது குறித்த அலசல்.

டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ்சை அடையாளம் காட்டியவர் என கூறப்படுபவர், அதிமுகவில் அதிரடிக்கு பெயர்போன தங்கத்தமிழ் செல்வன் திமுகவுக்கு திடீரென தாவியுள்ளார்.

திமுகவை எதிர்த்து எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதா தலைமையில் 28 ஆண்டுகாலம் வெற்றிகரமாக நடைபோட்டது.

ஒரு காலத்தில் உறவினர்களாக இருந்தாலும் திமுகவினர் வீட்டு விசேஷங்களில் அதிமுகவினர் கலந்துக்கொள்ளமாட்டார்கள் என்கிற அளவுக்கு ராணுவ கட்டுப்பாடு நிலை இருந்தது.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அது தளர்ந்து அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பலரும் திமுக பக்கம் தாவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதில் தற்சமயம் இணைந்திருப்பவர் அதிமுகவில் 3 முறை எம்.எல்.ஏவாகவும், ராஜ்யசபா எம்பியாகவும், ஜெயலலிதாவின் தேர்தல் ஏஜண்டாகவும், சசிகலா குடும்பத்துக்கு நெருங்கிய நபராகவும், தற்போது அமமுக கொள்கைபரப்புச் செயலாளராகவும் பதவி வகித்த தங்கதமிழ் செல்வன்தான் அவர்.

1984-ம் ஆண்டு எம்ஜிஆர் நின்று வெற்றிப்பெற்ற ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 2001-ம் ஆண்டு நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர்தான் தங்கதமிழ்ச் செல்வன்.

டான்சி வழக்கு தீர்ப்புக்குப்பின் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் போட்டியிட தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் தங்கதமிழ்ச்செல்வன்.

2002-ம் ஆண்டு ஜெயலலிதாவின் தேர்தல் ஏஜண்டாக பணியாற்றினார் தங்கதமிழ்செல்வன். தனக்காக ராஜினாமா செய்த தங்கத்தமிழ்செல்வனை 2002-ம் ஆண்டு ராஜ்யசபா எம்பி ஆக்கினார் ஜெயலலிதா. மாவட்டச்செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது.

அடுத்து 2006-ம் ஆண்டும் ஜெயலலிதா அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் ஜெயலலிதா தொகுதி மாறியதால் மீண்டும் ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் வாய்ப்பு தங்கதமிழ்ச்செல்வனுக்கு கிடைத்து.

2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் தொடர் வெற்றிப்பெற்றாலும் தொகுதியில் மற்றொரு செல்வாக்கு மிக்க ஓபிஎஸ் வளர்ச்சியின் காரணமாக அமைச்சர் பதவி இவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

அதிமுகவின் முக்கிய தலைவரான ஓபிஎஸ், தங்கத்தமிழ் செல்வனால் டிடிவிக்கு அடையாளம் காட்டப்பட்டவர் என அங்குள்ள அதிமுகவினர் கூறுவர்.

நகரச்செயலாளராக இருந்த ஓபிஎஸ்சை டிடிவி தினகரனுக்கு அறிமுகப்படுத்தியதன்மூலம் அவரது அடுத்தடுத்த வளர்ச்சிக்கு தங்கத்தமிழ் செலவன் காரணமாக இருந்தார் என அவரது ஆதரவாளர்கள் கூறுவர்.

எப்போதும் பரபரப்பான நடவடிக்கைக்கு சொந்தக்காரரான தங்கதமிழ்ச்செலவன் ஊடக வெளிச்சத்திற்கு வந்தது கூவத்தூர் விவகாரத்தில்தான். அதன்பின்னர் ஊடகங்களில் பரபரப்பான பேட்டிக்கு சொந்தக்காரர் ஆனார் தங்கதமிழ்செல்வன்.

டிடிவி தினகரனின் போர்ப்படை தளபதி என்றழைக்கப்பட்ட தங்கதமிழ்ச்செல்வன், அதிமுகவிலிருந்து தினகரன் நீக்கப்பட்டபோது அவருடனே பயணித்தார்.

அமமுகவின் செய்தி தொடர்பாளராக சிறப்பாக பணியாற்றி தினகரனுக்கு அடுத்து பரபரப்புமிக்க ஊடக வெளிப்பாட்டாளராக விளங்கினார்.

அது அவருக்கு சாதகமாகவும், பாதகமாகவும் இருந்தது. உணர்ச்சிவசப்பட்டு அவர் அளித்த பேட்டிகள் ஆரம்பத்தில் வரவேற்பைப்பெற்றாலும் தேர்தல் தோல்விகளுக்குப்பின் அதுவே அவருக்கு எதிராக மாறியது.

கட்சித்தலைமையைக் கேட்காமல் பேட்டி, கட்சித்தலைமைக்கு எதிராக பேட்டி என பரபரப்பை ஊட்டிய தங்கத்தமிழ்ச்செல்வன் இறுதியில் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

திமுகவிலும் அதே பரபரப்பை காட்டுவாரா? அல்லது செந்தில்பாலாஜிபோல் மவுனமாக சாதிப்பாரா? கலைராஜன் போல் இருப்பாரா? என்பது போகப்போக தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x